பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Monday 10 October 2016

தாடிமுளைத்த மழலைகள் .. !!






சிறகுகள் விரிக்கத்தெரியாத
சிக்கல் மனம் !!


பட்டாம்பூச்சிகளைத் தேடும்
பாசிபடர்ந்த கண்கள் !!


மூளை நரம்புகளின்
கணக்குச் சிக்கல்களில்
பிறழ்ந்த விடை !!


கிழிந்த சட்டைக்குள்
குட்டிச்சிறுவர்கள் வீசிய
கற்துண்டுகள் !!


இயல்பைத் தொலைத்த
இயல்பான கனவுகள் !


விடுதலைச் சிரிப்புகள் !!
வேதனை மறந்த
விசாரிப்புகள் !!


குழந்தைக் குறுகுறுப்பில்
பிணக்கு மொழி !!


தெருவோரத்து
வெட்டப்பட்ட மரத்தின் மீதோ,
சாலையோர
தார்த்தகிப்பிலோ..


வாசற் கோலங்களின்
அழகை விசாரிக்கும் போதோ
தெருநாய்கள் குரைக்கும்
இருட்டு சந்துகளுள்ளோ,


ஒரு
அழுக்கடைந்த மனிதனை
நீங்கள்
சந்திக்கலாம்..


அன்புக்கரம் நீட்டிப்
புன்னகை உதடுகளால்
பொன்னுதவி செய்யுங்கள் !!


மெல்லாதரவால் அவர்களின்
மனநலம் விசாரியுங்கள் !!


அவர்கள்
தாடி முளைத்த  மழலைகள் !!


இன்று உலக மனநலதினம் !! ( அக்டோபர் 10 )

  

                                    -----    சி.குருநாதசுந்தரம்.

Saturday 8 October 2016

அஞ்சல் அட்டை !!





மஞ்சள் முகத்தின்
எழுத்தொப்பனை அழகு !!


எழுத்துகளின்
இதமான. இருப்பில்
பேனாக்களின் வாசனை  !
 

குறுகிய  பரப்பிற்குள்
ஒடுங்கியிருக்கும்
வகுப்பறை. மாணாக்கரின்
இறுக்கத்துடனும்  எழுத்துகள் !!


நீட்டி முழக்கும்
நெடிய எழுத்துகளுக்கு
இங்கே இடமில்லை…


நலங்களும் விசாரிப்புகளும்
குறளடியாய்க் குறுகும்.


விடுதிக்குள்ளிலிருந்து
மகனின் மணம்
அஞ்சலட்டையில் பயணிக்கும்.


புகுந்த வீட்டின்
மகளதிகாரப் பயணங்களில்
அம்மாவின்
இதயத்துடிப்புகள் சீராக்கப்படும்!!

.
முதியோர் இல்லங்களின்
சுமை மனதுகளைச்
சுமந்து வரும்  
கண்ணீர் எழுத்துகளில்
அஞ்சலட்டை அழுததும் உண்டு..


கரிசல் மேட்டில்
மகனின் முகத்தை
வாசிக்கும் 
தாயின் முத்தத்தில்
அஞ்சலட்டை  அழகாகும்..


துக்கமும் துயரமும்
கண்ணீரும் வலியும்
அன்பும் அழுகையும்
சிந்தனையும்  சிரிப்புமாய்
அஞ்சலட்டைக்குப் பலமுகங்கள் !!



அகப்படுதலுக்கான
எந்த மூகாந்திரமும் இல்லாமலேயே
தபால்காரத் தந்தையும் நானும்
தேடுகிறோம்.


எங்களுக்கு
அகப்படவே இல்லை.
அந்த
மஞ்சள் முகத்தின்
மின்னஞ்சல் .முகவரி !!


இன்று உலக தபால் தினம்.


                                            சி.குருநாதசுந்தரம்..


Thursday 6 October 2016

மனிதக் கொம்புகள்.



ஒரு
நண்பகல் நகர்வு.


சொற்களினூடே பயணிக்கிறேன்.
நகர்வுகளில் நன்மையேதுமில்லை.


சொல்லாழத்தில் முகிழ்த்து,
மூழ்கியிருந்த தருணம்,


நகர்வுகளில் மந்தம்.
தலைகவிழ்ந்த தலையொன்று
நகர்வுப் பாதையின் குறுக்கே
மந்தகாசமாய் படுத்திருந்தது.


தலையின் நடுவில்
கொம்புகள்  முளைத்திருந்தன..
கொம்புகளில்
நகர்வை நிறுத்தப்புகும் ஆவேசம்.


தன்சுயம் தோற்ற
தன் கொம்புகளால்
அது
சுயமிழந்திருந்தது..


என்
நகர்வுகளில் வேகம்.


கொம்புகளின் எக்காளம்.


என் நகர்வுகளில்
எதிரெதிராய்
நானும் அக்கொம்புகளும்.


உணர்த்தலில்லா தடைகளற்ற
இளமைச் சமமின்மையில்
கொம்புகளில் குதூகலம்.


பின்னொரு
நண்பகல் நகர்வில்
தன்சுயமிழந்த கொம்புகள்
ஏதோ ஒரு நகர்வினால்
வெட்டப்படலாம்..

அப்போது
தலைகவிழ்ந்திருக்கும் தலை
தலைநிமிரச் சற்று சிரமாயிருக்கும்.



                                  ---   சி.குருநாதசுந்தரம்.


Sunday 11 September 2016

பாரதி........ தீ !!!




நினைவுகளில்   என்றும்
உயிர்த்திருக்கிறாய்.
என்
நொடிகளில் என்றும்
பயணிக்கிறாய்..

உனது
மீசை வைக்கும்
எனது எத்தனிப்புகள் மட்டும்..
தினந்தோறும்
தோற்றே போகிறது.

உடற்கல்விப்   பாடவேளையில்
இலக்கணம் கற்பிக்கும் அவசரத்தில்
உன்
ஓடி விளையாடும் பாப்பாக்களை
ஒளித்து வைத்தேன்..

மைதானத்தை விட
மதிப்பெண்கள் தானே முக்கியம் இங்கு !

பாதகம் செய்பவரைக் கண்டால்
பயம் கொள்கிறது மனம் !!
பணத்துள் மரணித்துவிட்டது..
மோதி மிதித்தல்கள் இங்கு !!
உமிழ்நீரும்  வற்றிவிட்டது !!

சிறகொடிந்த குருவிகளும்
கரைய மறுத்த  காக்கைகளும்
வயல்  தேடும் மாடுகளும்

ஆதரித்தலுக்காய்
அங்குமிங்கும்  அலைகின்றன.

ஆங்கிலச்  சுவையில்
உன்
அமிழ்தத்தமிழை எங்கெனத் தேடுகிறது..
என்
மாணவ  நாக்குகள் !!

இருந்தாலும்
உன்
நெருப்புக் கண்களையும்
துடிக்கும் மீசையையும்
அச்சமில்லாத்  தலைப்பாகையையும்


என்
மாணவனுக்குள் 
தினமும் பொருத்திப் பார்க்கிறேன்..

பொருத்துதலின்  உயிர்ப்பில்
நீ
மீண்டும் உயிர்ப்பாய் ..

என்னுள்
வாழ்ந்து  கொண்டிருக்கும்
உன்
நினைவுகளுக்கு   நன்றி !!


  சி.குருநாதசுந்தரம், புதுக்கோட்டை.

Sunday 4 September 2016

ஆசிரியர் தின வாழ்த்துகள்

 வாசம் !

வகுப்பறை வாசமற்ற
நாள்கள்
என்னுள் வசப்படுவதில்லை.

உதிர்ந்த சுண்ணாம்புத் துகள்களுக்குள்
மாணவ வாசம் தேடுகிறேன்.

புரிதலற்ற விடைத்தாளுக்குள்
புரிதலின் வாசம் தேடுகிறேன்..

பாடக்குறிப்பேட்டுக்குள்ளும்
மதிப்பெண் பட்டியலுக்குள்ளும்
வாசம் வசப்படுவதேயில்லை..

புத்தகங்களுக்குள் ஒளித்துவைத்திருந்த
மயிலிறகில்
புத்தக வாசமில்லையெனெ
புகார்க்கடிதங்கள் மாணவரிடமிருந்து..

கற்பித்தலுக்குள்
என் வாசம் தேடி
நெடுந்தூரம் பயணிக்கிறேன்..

யாருக்கும் தெரியாமல்
பறித்து வந்த,
ஒற்றைச் செம்பருத்தியை
என்னிடம் தந்து,
வாழ்த்துச் சொல்லிப் போனான்..
ஒன்பதாம் வகுப்பு அஜய்.

கசங்கிய பூவில்  மணத்தது..
நான்
தேடிய வாசம் !!!

ஆசிரியத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்..
வாழ்த்துகளுடன் 

சி.குருநாதசுந்தரம். 

Monday 29 August 2016


தொலைந்தவை .







நான் ஏன் இருக்கணும் ?? ---

கடந்த வயது அப்படியே தான் முடிந்தது.இந்த வயதும் அப்படியே தான் துவங்கி இருக்கிறது.திருவுடையானை இழந்திருக்கிறேன். திருவுடையானுடன் இரண்டு நிமிடங்கள் கூடத் தனிப்படப் பேசியிருக்க மாட்டேன். எனக்குத் தெரிந்தவை எல்லாம் அவருடைய நெருக்கமான சிரிப்பு, பாடும் போது வெளியேயும் உள்ளேயும் அதிர்ந்தடங்கும் குரல், சதா தரையில் அமர்ந்து வாசிக்கையில் தபேலாவில் புரண்டாடும் அவருடைய விரல்கள்.
என் இரண்டு மூன்று மேடைப் பேச்சை அவரின் தபேலா வாசிப்பில் இருந்து துவங்கியிருக்கிறேன். திறவு கோல்களையும் திறப்புகளையும் எனக்குத் தந்தவை அவர் விரல்கள். அவரே அறியாத ஒரு அவர் என்னுடன் எப்போதும் இருந்திருக்கிறார். நிறையப் பேரை இப்படி இழக்கச் செய்கிற வாழ்வு, இப்படி இன்னும் சிலரையேனும் அடையச் செய்யுமா தெரியவில்லை.

வருத்தத்தில் அல்ல, நிறைவில் தான் தோன்றுகிறது, 'நான் எல்லாம் ஏன் எழுதணும்?'இசையின் 'ஆட்டுதி அமுதே' , ஜான் சுந்தரின் 'நகலிசைக் கலைஞன்' இரண்டையும் அடுத்தடுத்து வாசித்து முடித்ததும் அப்படித்தான் தவிக்கிறது.மரபின் மைந்தன் முத்தையா, ஜயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் இருவரோடும் முதல் நாள் மாலை மேடையில் பேசுகிறேன். மறுநாள் முத்தையா, ஜயந்தஸ்ரீ, அவரது கணவர் பாலகிருஷ்ணன் மூவரோடும் இருக்க வாய்க்கிறது. முன்னிருவரையும் விட அதிகம் என்னைத் தொடுகிறவராக பாலகிருஷ்ணனை உணர்கிறேன். அவர்களிடம் விடை பெறுகையில் தோன்றுகிறது, 'நான் எல்லாம் எதற்குப் பேசணும்?'

நா.முத்துக்குமார், எங்கள் குடும்பத்தின் ரேஷன் கார்டில் இணைக்கப்படாத பெயராக இருந்த 'மீனாக்கா', இன்றைக்குக் காலை திருவுடையான் எல்லோரின் மறைவுக்குப் பின், எனக்குத் தோன்றுகிறது, 'நான் ஏன் இருக்கணும்?'

இப்படி எல்லாம் கேள்வி வருவது, சுய இரக்கத்தில் அல்லது ஒரு வருத்தத்தில் அல்ல, ஒரு வித உணர்வு நிறைவில் தான். தெருக் குழாயில் குடி தண்ணீர் பிடிக்கப் போகிறவள், தன் ஆயிரம் அன்றாடக் கவலையின் நடுவில், சொரு சொருவென்று மஞ்சள் பிளாஸ்டிக். குடம் கழுத்து வரை நிறைந்து விளிம்புக்கு வருவதைப் பார்க்கிற நேரத்து மன நிலை. வழிந்து சிந்துவதை கூடுதலாக ஒரு கணம் பார்த்து,பார்த்தபின் பதறுகிறவன் தானே நான்

-- கவிஞர் வண்ண நிலவனின் இரங்கல் செய்தி.

சமூகப் பிரக்ஞையுள்ள ஒரு கலைஞனின் இறப்பின் இடைவெளி நிரப்பவியலாப் பெருவெளி.


அவரின் பணி அளப்பரியது. இனி எந்தக் குரல்நாணும்  ஆத்தாவின் சேலையை   அவரைப் போல் நெய்ய  முடியுமா என்பது ஐயமே.. ஒரு சமூகக் கலைஞனுக்கு ரௌத்திரம் பழகிய புரட்சியாளனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் -  சி.குருநாதசுந்தரம்.

Saturday 27 August 2016

புரிதலில் வசமாகும் மகிழ்ச்சி



புரிதலில் வசமாகும் மகிழ்ச்சி : சி.குருநாதசுந்தரம்.

நாளை அரசுப் பொதுத் தேர்வில் மாணாக்கரை நூறு விழுக்காடு தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடைபெறுவதாகத் தலைமையாசிரியர் கூறினார். மேலும் எனக்கு வாழ்த்து தெரிவித்து சென்று வரப் பணித்தார். அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் அவர் அவ்வாறே செய்து ஒரு குறிப்பையும் கூறினார். அடுத்த ஆண்டும் இவ்வெற்றி தொடர வெண்டும் என்பதே அது.

அடுத்த வருசம் கொஞ்சம் கஷ்டம் தான். ரெண்டு மாணவர்கள் இருக்காங்க . ஒரு ஆசிரியர் கவலையோடு முணுமுணுத்தார்
.
எனது வகுப்பில் ஐயப்பன் என்ற மாணவன் எப்போதும்   தமிழ்ப்பாடத்தில் தோல்வியடைந்து கொண்டே இருப்பான்,  ஆகஸ்டு  மாத அலகுத்தேர்வில்  முப்பத்து எட்டு  மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றதைக்  கண்ட நான் சொல்லொணா மகிழ்வுற்றேன்.. ஐயப்பனின் பெயரை வகுப்பறையில் அவ்வப்போது உச்சரிக்க ஆரம்பித்தேன். அவனைப் போல எல்லோரும் மாறவேண்டும் என்று கூறினேன். நான் செல்லும் மற்ற வகுப்பறையிலும் அவனைப் பற்றி பகிர்ந்து கொண்டேன். இந்த செயல் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவனுக்கு புரிதலற்ற எரிச்சலைக்  கொடுத்தது. அவன்  94  மதிப்பெண்கள் வாங்கியிருந்தும் அவனுடைய பெயரை வகுப்பறையில் உச்சரிக்காமல்  38  மதிப்பெண்கள்  எடுத்த ஐயப்பனை  முன்நடத்தைக் குறியீடாக்குவதைக் கண்டு   மனதுள் வெம்மை கொண்டிருந்தான். எதிர்மறைப் பின்னுரையாடல்களை அவனுடைய நண்பர்களிடத்தில்   பகிர்ந்து கொண்டிருக்கிறான். எனவும் அறிந்தேன்.

பைபிளில் ஒரு கதை வரும். ஆடுகளை மேய்க்கும் ஒருவர் 100 ஆடுகளை மேய்த்துக்கொண்டிருப்பார். மாலையில் வீடு திரும்பும் வழியில் ஆடுகளை எண்ணிப் பார்க்கும் போது அங்கு 99 ஆடுகளே இருந்தன. ஒரு ஆட்டைக்  காணவில்லை. 99 ஆடுகளையும் விட்டு விட்டு , அந்த மேய்ப்பன் ஒரு ஆட்டைத் தேடி அலைவார். தொலைந்து போன ஆடு கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த ஆட்டைத்  தோளில் போட்டுக் கொண்டு மகிழ்வுடன் வீடு வந்து சேர்ந்ததாக அக்கதை  முடியும்

மேய்ப்பனை சரியாக பின் தொடர்ந்த 99 ஆடுகளும் நடந்தே வந்தன. ஆனால் காணாமல் போன ஆடு மட்டும் மேய்ப்பனின் தோளில் அமர்ந்து வந்தது. இதை பார்த்த 99 ஆடுகளும் நாமும் காணாமல் போனால் இதைப் போல் மேய்ப்பனால் குதூகலிக்கப் படுவோம் என நினைப்பதில்லை.


ஆனால் மனிதர்கள்,. தாம்  காணாமல் போனால் நம்மைத் தூக்கி வர மேய்ப்பர்கள் வருவார்கள்  என எண்ணுகிறார்கள்.

அதனால் தான் சிலவேளைகளில்,

நிழல் தரும் மரங்களுக்கு அடியில் நடந்து கொண்டேயிருந்தாலும் யாராவது குடைகொண்டு வந்து வெம்மை தீர்ப்பார்களா , என்று தேடுகிறார்கள்.

சுவை தரும் பழத்தோட்டத்தில் நின்றாலும் தன் பசிக்குப் புசிக்க யாராவது உணவு கொண்டுவர மாட்டார்களா? என காத்திருக்கிறார்கள்.

அன்பை பகிர்ந்து கொள்வதற்கு சுற்றிலும் சுற்றம் இருந்தாலும் யாராவது அன்பு செய்ய மாட்டார்களா? என ஏங்குகிறார்கள்.

ஒருவருக்குப் பாராட்டு கிடைக்கும் போது அதை மனதார ரசித்து வாழ்த்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. மற்றொருவர் பாராட்டுப் பெறும் போது அந்தப் பாராட்டு தனக்கும் வேண்டும் என அடம்பிடிப்பது ஒருவகையான நோய். அந்த நோய் தான் முதல் மதிப்பெண் எடுத்த மாணவனுக்கும் வந்திருந்தது. அந்த நோயை குணப்படுத்த சரியான மருந்தும் இருக்கிறது.

எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் பிறரைப் புரிந்துகொள்கிறீர்களோ,
அவ்வளவுக்கவ்வளவு நீங்கள் மகிழ்ச்சியை உங்கள் வசமாக்குவீர்கள்.

அம்மாணவனுக்கு நான் புரிய வைத்தேன். இப்பொழுதெல்லாம் ஐயப்பனைப் பரிவுடன் பார்க்க ஆரம்பித்திருந்தான் அந்த மாணவன்.

      வட்டம் போடக் கற்றுக் கொண்டிருக்கும் நிஷாவும், ரெட்டைக் கொம்பு நெடிலைத் தேடிக்கொண்டிருக்கும் ரெங்கராஜனும்  அடுத்த தேர்வில் ஐயப்பனின் பாராட்டைத் தன்வசப்படுத்த போராடத் தொடங்கி விட்டார்கள்  என்று மகிழ்வோடு கூறிய ஆங்கில ஆசிரியரின்  செய்தி எங்கள் காதுகளில் தேனாய்ப் பாய்ந்தது.

      பாராட்டுப் பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள். அடுத்த ஆண்டு பாராடுப் பெறும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் முன்வாழ்த்துகள்.
                                       அன்புடன் சி.குருநாதசுந்தரம்


நன்றி : திரு. பெர்ஜின் முகநூல் நண்பர்..