வாசம் !
வகுப்பறை
வாசமற்ற
நாள்கள்
என்னுள்
வசப்படுவதில்லை.
உதிர்ந்த
சுண்ணாம்புத் துகள்களுக்குள்
மாணவ
வாசம் தேடுகிறேன்.
புரிதலற்ற
விடைத்தாளுக்குள்
புரிதலின்
வாசம் தேடுகிறேன்..
பாடக்குறிப்பேட்டுக்குள்ளும்
மதிப்பெண்
பட்டியலுக்குள்ளும்
வாசம்
வசப்படுவதேயில்லை..
புத்தகங்களுக்குள்
ஒளித்துவைத்திருந்த
மயிலிறகில்
புத்தக
வாசமில்லையெனெ
புகார்க்கடிதங்கள்
மாணவரிடமிருந்து..
கற்பித்தலுக்குள்
என்
வாசம் தேடி
நெடுந்தூரம்
பயணிக்கிறேன்..
யாருக்கும்
தெரியாமல்
பறித்து
வந்த,
ஒற்றைச்
செம்பருத்தியை
என்னிடம்
தந்து,
வாழ்த்துச்
சொல்லிப் போனான்..
ஒன்பதாம்
வகுப்பு அஜய்.
கசங்கிய
பூவில் மணத்தது..
நான்
தேடிய
வாசம் !!!
ஆசிரியத்
தோழமைகளுக்கு வாழ்த்துகள்..
வாழ்த்துகளுடன்
சி.குருநாதசுந்தரம்.
அருமை தோழர் மகிழ்வு
ReplyDeleteமிக்க நன்றி தோழர்.
Deleteஆசிரியர் தின வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Delete