மறைந்த முதுபெரும் இலக்கிய ஆளுமை திருமிகு. இராஜம்கிருஷ்ணன்
அவர்களின் நினைவுத் தளங்களிலிருந்து ………
தற்பொழுது மறைந்த மூத்த பெண் எழுத்தாளரான இராஜம் கிருஷ்ணன்
பிறந்த தேதி 05.11.1925. பெற்றோர்கள் யஞ்ஞ நாராணன், மீனாட்சி. கணவர் மின்வாரியப் பொறியாளரான முத்து கிருஷ்ணன். 1946லிருந்து பல்வேறு பத்திரிகைகளில் எழுதி வருகிறார். கணவரின் பணிமாற்றம்
காரணமாக ஊட்டி, குந்தா, கோவா போன்ற
இடங்களுக்குச் சென்றிருந்தமை இவர் நாவல் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருந்தது.
1948-இல் சுதந்திர ஜோதி என்ற நாவல் மூலம் எழுத்துலகில் புகுந்த இராஜம்
கிருஷ்ணன் நாற்பதுக்கும் மேற்பட்ட நாவல்களைப் படைத்துள்ளார். முதல் சிறுகதையான வெள்ளி டம்ளர் சாவி அவர்களின் ‘வெள்ளி மணி’யில் வெளிவந்தது. அலைகடலில், பவித்ரா, அல்லிபோன்ற குறு நாவல்கள், டாக்டர் ரங்காச்சாரி வாழ்க்கை வரலாறு,பயணநூலான அன்னை
பூமி, மாஸ்கோ போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். கதையின் கதை, கானாற்றின் செல்வங்கள் போன்ற 25 வானொலி நாடகங்களையும் படைத்துள்ளார். ஊசியும் உணர்வும் என்ற உயரியகதை உலக மொழிகளின் சிறுகதைப் போட்டியில்
பரிசு பெற்றது. அதிலிருந்து அவ்வப்போது சில ஆண்டு மலர்களிலும் மற்றும்
சிறப்பிதழ்களிலும் சிறுகதைகள் எழுதினார். இருந்தாலும், “நாவல்துறையில் அவர்
பெற்றிருக்கும் புகழ்தான் முக்கியமானது” என்று மணிக்கொடி
எழுத்தாளரும் சிறந்த திறனாய்வாளருமான ‘சிட்டி’ பெ.கோ. சுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார். இராஜம் கிருஷ்ணன் சிறுகதை,
வாழ்க்கை வரலாறு, வானொலிக் கட்டுரைகள்,
வானொலி நாடகங்கள், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் போன்ற பல துறைகளில் சாதனை முத்திரை பதித்திருந்தாலும்
நாவல் துறையில் மட்டுமே அதிகக் கவனம் செலுத்தியுள்ளார்.
மிகச்சிறந்த நாவலாசிரியரான இவர் இருமுறை இலக்கியச்
சிந்தனைப் பரிசு பெற்றுள்ளார். இருமுறை சோவியத் நாடு சென்றுள்ளார்.
பெண்குரல்
|
-
|
கலைமகள் பரிசு (1953)
|
மலர்கள்
|
-
|
விகடன் பரிசு (1958)
|
வேருக்கு நீர்
|
-
|
சாகித்ய அகாதெமி விருது (1973)
|
வளைக்கரம்
|
-
|
சோவியத் நாடு நேரு பரிசு (1975)
|
கரிப்பு மணிகள்
|
-
|
இலக்கியச் சிந்தனை விருது (1980)
|
சேற்றில் மனிதர்கள்
|
-
|
இலக்கியச் சிந்தனை விருது (1983)
|
சுழலில் மிதக்கும் தீபங்கள்
|
-
|
தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு (1983)
|
இராஜம் கிருஷ்ணன் பெற்ற பரிசுகளே அவருடைய
இலக்கியத் தரத்தை உயர்த்திக் காட்டும் துலாக் கோலாகத் (தராசாக) திகழ்கின்றன.
இராஜம் கிருஷ்ணனின் சிறுகதை, வாழ்க்கை வரலாறு, வானொலி நாடகங்கள், மொழிபெயர்ப்பு சிறுவர் இலக்கியம்
போன்ற பல துறைகளில் தன் பங்களிப்பைச் செய்திருந்தாலும் சிறந்த சமூக நாவலாசிரியர்
என்ற முறையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுகிறார்.
நாவலுக்கான மையப்பொருளை முன்பே திட்டமிட்டு உரிய
இடத்தை அடைந்து, களஆய்வு
செய்து, சமகாலப் பிரச்சினைகளை எழுதுவதே இராஜம் கிருஷ்ணனின்
தனித்தன்மையாகும்.
புதிய கருக்களுக்கு உருகொடுப்பதும், பழைய பொருளுக்குப் புதிய
பின்புலம் தந்து தெளிவுபடுத்துவதும் அவரது சிறப்புத் தன்மைகள்; மானிடவியலையும் மனவியலையும் (Anthropology and Psychology) எழுதுவதில் வல்லவர்; பழங்குடியினர், பல மாநில மக்களின் வாழ்வு, நாட்டு வரலாறு, அரசியல் ஆகிய பின்னணியில் நாவல் படைப்பதில் வல்லவர்.
அவரைப் பற்றி இறுதியாக வாசித்த கட்டுரை - மனதை உறுத்தியது.
1973ம் ஆண்டு சாஹித்ய அகாதமி
விருது பெற்ற மாபெரும் எழுத்தாளர் அந்தப்
பெண்மணி. ஆனால் இன்று ஆதரவுக்கு ஆளின்றி
ஒரு முதியோர் இல்லத்தில் தன் மிச்ச நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார். அவர்...
ராஜம் கிருஷணன். தமிழின் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவர். இடதுசாரி
சிந்தனைகளுடன், அதே நேரம் மக்களின் யதார்த்த வாழ்க்கையை
முற்போக்கான 50க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் நூறுக்கும்
அதிகமான சிறுகதைகள், கட்டுரைகளைத் தமிழுக்குத் தந்தவர். 1950-லேயே புகழ்பெற்ற நியூயார்க் ஹெரால்ட் டிரிபியூனின் சர்வதேச விருது பெற்ற
தமிழ் எழுத்தாளர் இவராகத்தான் இருக்கும்.
உப்பள மக்களின் வாழ்க்கையின்
அடிப்படையில் இவர் எழுதிய வேருக்கு நீர்தான் இவருக்கு சாஹித்ய அகாதமி விருதைப்
பெற்றுத் தந்தது. இவரது மண்ணகத்துப் பூந்துளிகளையும், குறிஞ்சித்
தேனையும், கரிப்பு மணிகளையும் தமிழறிந்த எந்த வாசகரும்
மறந்திருக்க முடியாது. இந்தளவு புகழின் உச்சியிலிருந்த ஒரு மிகப் பிரபல
எழுத்தாளருக்கு ஏனிந்த பாதுகாப்பற்ற நிலை? திருச்சி மாவட்டம்
முசிறியில் 1925-ம் ஆண்டு பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். 2002-ம் ஆண்டு தன் கணவர் கிருஷ்ணனை இழந்தார். பிள்ளைகள் கிடையாது. அதன் பிறகு
தனது உறவுக்காரர்கள் சிலரை நம்பி தன்னிடமிருந்த பணத்தையும், சொத்துக்களையும்
விட்டு வைத்தாராம். ஆனால் அவர்களோ இவரை ஏமாற்றிவிட்டு மொத்தமாக ஏப்பம் விட்டுவிட,
83 வயதில் நடுத் தெருவில் நிர்க்கதியாய் நிற்க, சில நண்பர்களும் அவரது ஒரு சகோதரரும் கை கொடுத்துள்ளனர்.
அவர்கள்தான் ராஜம்
கிருஷ்ணனை விச்ராந்தி என்ற இந்த முதியார் இல்லத்தில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால்
யாரும் தன்னைப் பார்த்து இரக்கப்படுவதை இந்த நிலையிலும் விரும்பாத ராஜம் கிருஷ்ணன்,
இப்போதும் அதே உற்சாகத்துடன் எழுத்துப் பணியைத் தொடர்கிறார். இவரது
கடைசி புத்தகம் 'உயிர் விளையும் நிலங்கள்'. குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அதை பெண்கள் எதிர்நோக்கும் விதங்கள்
குறித்து 25க்கும் மேற்பட்ட கட்டுரைகளோடு கூடிய இந்தப்
புத்தகம் பெண்களுக்கு புதிய விழிப்பை உண்டாக்கும் முயற்சி. இப்போதும் கட்டுரைகள்
மற்றும் கதைகளை எழுதிக் கொண்டிருக்கும் ராஜம்,
தமிழ் இலக்கிய
உலகப் போக்கு குறித்த தனது அதிருப்தியை இப்படி வெளிப்படுத்துகிறார்: உப்பளங்களில்
வாழும் மக்களின் வாழ்க்கை முறையைப் பதிவு செய்ய தூத்துக்குடி உப்பளத்தில் 6
மாதங்கள் தங்கியிருந்தேன். காரணம் எதையும் மேம்போக்காக்கப் பதிவதில்
எனக்கு விருப்பமில்லை. மக்களின் வாழ்க்கையை அதன் வலிகளோடும், இயல்புகளோடும் பதிவு செய்ய வேண்டும். இன்றைக்கு பெரும்பாலான எழுத்தாளர்கள்
தாங்கள் எழுதும் கதையின் களத்தைப் பற்றிய அறிவு கூட இல்லாமல்தான் எழுதுகிறார்கள்.
எல்லாம் வறட்டுக் கற்பனை. இவர்களுக்கு சினிமா, சினிமா
பாடல்கள்தான் வாழ்க்கை, இலக்கியம் என்றாகிவிட்டது.
யாருக்கும் மக்களைப் பற்றிய அக்கறையோ, குறைந்தபட்சம்
அவர்களின் உலகத்தை எட்டிப் பார்க்கும் ஆவலோ கூட கிடையாது. எழுத்து பெரிய வணிகமாகிவிட்டதன்
விளைவாகக் கூட இது இருக்கலாம்...' என்கிறார் ராஜம்
கிருஷ்ணன்.
தமிழ்எழுத்தாளர்களின் இறுதிக்காலம் இத்தகைய கொடூரமாக
இருக்கவேண்டியதில்லை. இதுபோன்ற எழுத்தாளர்கள் தமிழில் கவனிப்பாரற்றுக் கிடக்கிறார்கள் அவர்களை கைதூக்கி விட்டு தமிழ் இலக்கியம் சாகாமல் காப்பாற்ற வேண்டியது நம் கடமை மட்டுமல்ல.
இராஜம் கிருஷ்ணனின் வாழ்வு நமக்குத் தரும் பாடம்.