பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Tuesday 5 January 2016

நெஞ்சத்து அகநட்பு :

நெஞ்சத்து அகநட்பு :





          நட்பென்றால் நமக்கு கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், நட்பு நினைவிற்கு வரும். அதியமான், ஔவையார் நட்பு நினைவிற்கு வரும்.
          ஆனால் இப்பொழுது அதிகம் ஊடகங்களிலும் , இணையத்திலும் பேசப்படும் சிறந்த நட்பின் சான்று இவர்கள் தான் :
          ஜேன் கோம். பிரையன் ஆக்டன்.
          இருவரும் இணைபிரியா நண்பர்கள்..
          ஏனெனில், இவர்கள்தான்வாட்ஸப்புரட்சியை உருவாக்கிய தொழில்நுட்ப வல்லுநர்கள்.
         கோமுக்கு இப்போது வயது முப்பத்தொன்பது. ஆக்டனின் வயது நாற்பத்தி மூன்று. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகமுகநூல்நிறுவனம் மிகுந்த விருப்பத்துடன் இவர்களிடமிருந்து  ‘வாட்ஸப்உரிமையைப் பணம்  கொடுத்து வாங்கியது.
         விலை எவ்வளவு  தெரியுமா ?
         பத்து லட்சம்? ஐம்பது லட்சம்? ஒரு கோடி? பத்து கோடி? நூறு கோடி?
         தலைசுற்றி  மயங்கி  விடாதீர்கள் நண்பர்களே !
         வாட்ஸப்பை , முகநூல்    ஒரு லட்சத்து இருபது ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து. வாங்கியிருக்கிறது. எண்ணால் எப்படி எழுதுவது, எத்தனை பூச்சியம் போடுவது என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை..
                   இவர்கள் யார் ?
          ஜேன் கோம், உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். அந்நாட்டின் வறுமை இவரை அமெரிக்காவை நோக்கித் துரத்தியது. பதினாறு வயதில் கலிஃபோர்னியா மாகாணத்தின் மவுண்டெயின் வியூ என்கிற இடத்துக்கு வந்து குடியமர்ந்தார்.. அவரும், அவருடைய அம்மாவும் அரசாங்கம் தரும் இலவச உணவுக்காக மணிக்கணக்கில்  வரிசையில் நின்றவர்கள்.
         பத்தொன்பது வயதில் கோமுக்கு என்று சொந்தமாக ஒரு கணினி கிடைத்தது. கூடவே இணைய இணைப்பும் வைத்துக் கொண்டார். எந்நேரமும் கணினியும் கையுமாக உட்கார்ந்திருந்தவர்ஹேக்கிங்’ (ஹேக்கிங் என்பது தீய காரணங்களுக்காக மட்டுமல்ல, சில சமயங்களில் நல்ல விஷயத்துக்கும் தேவைப்படும்). அத்தொழில்நுட்பத்தில் வல்லுநர் ஆனார்.
                  உலகெங்குமிருக்கும் பிரபலமான ஹேக்கிங் குழுக்களுடன்  இணைந்து தீவிரமாகச் செயல்பட  ஆரம்பித்தார். பெரிய நிறுவனங்கள் பலவும் ஹேக்கிங் தொடர்பான உதவிகளுக்கு இவரை நாடின..  எர்னஸ்ட் & யங் என்கிற நிறுவனத்துக்கு மென்பொருள் பாதுகாப்பு சோதனைப் பணியாளராக பணிபுரிந்துகொண்டே கல்லூரியில் சேர்ந்து  கணினி அறிவியல் படித்தார்.

        யாஹூ நிறுவனத்தின் இணை நிறுவனரான டேவிட் ஃபைல் தங்களோடு வந்து இணையுமாறு வலியுறுத்தவே, , கல்லூரியை பாதியிலேயே விட்டு விட்டுயாஹூவில் இணைந்தார்.நல்ல ஊதியமும் பெற்றார்.
       அடுத்தவர் பிரையன் ஆக்டன் அமெரிக்கர். ஃப்ளோரிடா மாகாணத்தில் வளர்ந்தவர். ஸ்டேண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணினியில் பட்டம் பெற்றவர். ‘ஆப்பிள்நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகத் தன் வாழ்வைத் தொடங்கினார். 1996ல்யாஹூநிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
       இருவருக்கும் யாஹூவில் தான் மதிப்புமிக்க நட்பு மலர்ந்தது
       அப்போது எர்னஸ்ட் & யங் நிறுவனத்தில் மென்பொருள் பாதுகாப்பு சோதனையாளராகப் பணியாற்றிய ஜேன் கோம் அடிக்கடி யாஹூவுக்கு பணி தொடர்பாக வரவேண்டி இருந்தது. கோமுடைய புத்திக்கூர்மையும், நேர்மையும் ஆக்டனை கவர்ந்தது.
      சில மாதங்கள் கழித்து கோம், யாஹூவில் இணைந்தார். ஏற்கனவே இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மரியாதை, இணைந்து பணியாற்றிய போது நெருங்கிய நட்பாக மலர்ந்தது. பணி நேரத்திலும் பிற  நேரங்களிலும்  இருவரும்  ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
             2007ஆம் ஆண்டு இருவரும் ஒன்றாகவே பணியிலிருந்து வெளியேறினார்கள்.. தென்னமெரிக்காவுக்குப் பயணித்தார்கள்.
          ‘முகநூல் பிரபலமாக இருந்த நேரம் அது. . இருவரும் இணைந்து வேலைக்கு விண்ணப்பித்தார்கள். ஆனால், முகநூல் நிறுவனம் இவர்களை பணிக்கு சேர்த்துக் கொள்ள மறுத்தது. யாஹூவில் பணியாற்றிய போது சேமித்த பணம்  கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கியிருந்தது.
       ஜனவரி 2009.இல்  நண்பர் ஒருவரது வீட்டில் கோம் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ஆக்டனுக்கும் மற்ற நண்பர்களுக்கும் ஏதாவது செய்தி         
        அனுப்பிக் கொண்டே இருந்தார். செல்பேசியில்  இருந்த குறுஞ்செய்தி இயங்கியில் ( மொபைல் அப்ளிகேசன் ) மேலும் சில வசதிகள் இருக்கலாமோ என எண்ணிணார் கோம்.  மேலும் . ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் காசு செலவழிக்க வேண்டியிருக்கிறது. என்ற எண்ணமும் அவரை சிந்திக்க வைத்தது.  

                 மின்னஞ்சலின் இயக்க்கத்தை அறிந்து கொள்ளப் பயன்படுத்தும் இணைய இணைப்பு மூலமாகவே கூடுதல்  செலவில்லாமல் செய்தி  அனுப்பக்கூடிய வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று சட்டென ஒரு யோசனை  அவருள் உதித்தது.
        ஆக்டனிடம் பேசினார். சில மென்பொருள் பொறியாளர்களைக்  கலந்தாலோசித்தார்கள்.  தான் புதியதாக உருவாக்க இருக்கும் இயங்கிக்கு (அப்ளிகேஷனுக்கு)வாட்ஸப்என்று கோம்தான் பெயரிட்டார். பேச்சை நீட்டிக்க அடிக்கடி மெசேஜில்அப்புறம் என்ன?’ (what’s up?) என்று கேட்போம் இல்லையா? அதையே தன் நிறுவனத்துக்கும் பெயராக வைத்து, கலிஃபோர்னியாவில் தன்னுடைய  பிறந்தநாளான பிப்ரவரி 24, 2009 அன்று வாட்ஸப் இன்கார்ப்பரேஷனை ஜேன் கோம் தொடங்கினார்.
        தொடக்க காலங்களில்  ‘வாட்ஸப்அடிக்கடி சரிவர இயங்கவில்லை.. பயனாளர்களும் பெரிய ஆதரவு காட்டவில்லை. ஏற்கனவே செல்பேசிகளில் குறுஞ்செய்தி மென்பொருள் இருக்க, புதுசாக இன்னொன்று  எதற்கு என்று நினைத்தார்கள்.
                  “இது வேலைக்கு ஆகாது. சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, எங்காவது வேலைக்கு போய்விடப் போகிறேன்என்று கோம் சொன்னபோது, ஆக்டன் கோபத்துடன் மறுத்தார். “எனக்கென்னவோ இந்தவாட்ஸப்எதையோ பெரியதாக சாதிக்கப் போகிறது என்று தோன்றுகிறது. ஒரு சில மாதங்கள் பொறுமையாக இருஎன்றார். நண்பனின் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? இத்தனைக்கும் அப்போது ஆக்டன் வேலை இல்லாமல் சும்மாதான் இருந்தார். ட்விட்டரில் வேலைக்கு சேர முயன்று, அவர்களும் சேர்த்துக் கொள்ள வில்லை.
       தன்னுடைய வாட்ஸப்புக்கு பெரிய வரவேற்பு இல்லையென்றாலும் (வருமானமும் இல்லை), அதில் இருக்கும் குறைகளை அவ்வப்போது களைந்து கடமையே கண்ணாக  மேலும் மாற்றங்கள்  செய்துக் கொண்டிருந்தார் கோம். என்ன மாயமென்று தெரியவில்லை. திடீரென்று ஆப்பிள் பயனாளிகள் வாட்ஸப்பை அதிகமாக தரவிறக்கம் செய்ய ஆரம்பித்தார்கள். இரவும், பகலுமாக வாட்ஸப்பில் உரையாட  ஆரம்பித்தார்கள். அடுத்த சில நாட்களிலேயே சுமார் இரண்டரை லட்சம் பேர் வாட்ஸப் பயனாளிகள் ஆனார்கள்.
         “பெரிதுனும் பெரிது கேள்  நண்பாஎன்று ஆக்டனையும் தன்னோடு வாட்ஸப் நிறுவனத்தில் அக்டோபர் 2009 வாக்கில் இணைத்துக் கொண்டார். முன்னாள் யாஹூ நண்பர்கள் சிலரிடம் பேசி ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடு திரட்டி வணிகத்தைச் சிறிது  விரிவாக்கினார்கல். ஆப்பிளைத் தொடர்ந்து பிளாக்பெர்ரி செல்பேசிகளும்  வாட்ஸப் வசதியை நீட்டிக்க, ஆக்டனனின் எண்ணம் வெற்றியானது.,உண்மையாகவே  வாட்ஸப் பெரியதாக சாதிக்கத் தொடங்கியது.
          கடந்த ஆறு வருடங்களில் வாட்ஸப் அடைந்திருக்கும் வளர்ச்சி யாருமே யூகித்தறிய முடியாதது. பெரிய முதலீட்டு நிறுவனங்கள் பல்லாயிரம் கோடியை இதில் முதலீடு செய்திருக்கின்றன. முகநூல்  நிறுவனம் வாட்ஸப்பை எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார்கள் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்..
         நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக  முகநூல் நிறுவனத்திற்குக் மாற்றி விட்டுவிட்டாலும் இன்னமும் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஜேன் கோமும், பிரையன் ஆக்டனும்தான். கோம், வாட்ஸப்பின் மென்பொருள் தரத்தை பார்த்துக் கொள்கிறார். ஆக்டன், வணிகம்  தொடர்பான விடயங்களை கவனித்துக் கொள்கிறார். இருவரது உணர்வுப்பூர்வமான நட்புதான் வாட்ஸப்பை இந்த உயரத்துக்கு வளர்த்திருக்கிறது.

         பொதுவாக இணையத்தள பயன்பாடு என்றாலே எரிச்சலூட்டும் விளம்பரங்கள்தான் பெருந்தொல்லை. நிம்மதியாக ஒரு யூட்யூப் வீடியோவை கூட பார்க்க முடியாமல், அதற்கு முன்பாக ஒரு இருபது நொடி விளம்பரத்தை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. செய்திகளை வாசிக்கும்போது குறுக்கிடும் விளம்பர அட்டைகளை  மூடுவதற்குள் சோர்ந்து விடுகிறோம்.
        வாட்ஸப் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தன்னுடைய  மேசையில்  பிரையன் ஆக்டன் எழுதி வைத்திருக்கும் மந்திரச்சொல்தான் வாட்ஸப்பின் வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள்.
“No Ads! No Games! No Gimmicks!”
        நட்பு பரிமாறிக் கொள்ளும் சாளரமான வாட்ஸப்பில் வேறெந்த குறுக்கீடுகளும் எக்காலத்திலும் இருக்கக்கூடாது என்பதில் நண்பர்கள் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள். நட்பின் அருமையை அவர்களைவிட வேறு யார் அதிகமாக அறிய முடியும்?
              “சிலிகான் பள்ளத்தாக்கில் எங்கள் வாட்ஸப் நிறுவனத்தை போல நீங்கள் வேறெந்த நிறுவனத்தையும் பார்க்க முடியாது. பெரியதாக மிகப்பெரியதாக வளரவேண்டும் என்று நினைப்பதைவிட எங்களது அவ்வப்போதைய வெற்றியை தக்கவைத்துக் கொள்ளவே நாங்கள் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறோம். கிடைத்த வெற்றியை தக்கவைத்துக் கொண்டால், அதுவே நம்மை மிகப்பெரிய வெற்றியை நோக்கி கொண்டுச் செல்லும். எங்கள் தயாரிப்பை முன்னிலைப்படுத்தி, எங்களை பின்னணியில் மறைத்துக் கொள்கிறோம். இதைத்தவிர எங்களுக்கு வேறெந்த வணிக இரகசியமும் இல்லைஎன்கிறார் ஆக்டன்.



        வாட்ஸப், குழந்தைகளும்  பயன்படுத்தும் வண்ணம் எளிதாக இருக்கிறது. பாதுகாப்பானது. வேகமானது. மற்ற சமூகவலைத்தளங்களைப் போல நேரத்தை விழுங்குவதில்லை. நாமறிந்த நம்முடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களோடு மட்டும் கருத்துகளை பரிமாறிக் கொள்ளவோ, குறிப்பிட்ட ஒத்த விடயங்களுக்காக தனிக்குழு அமைத்து விவாதிக்கவோ உதவுகிறது. தகவல் பரிமாற்றம் இன்று  இதைப்போல் எளிமையாகவும், வேகமாகவும் வேறு எந்த வடிவிலும் இல்லை.
ஆனால்-
        யாருக்கு தெரியும்? ஆறு ஆண்டுகளுக்கு முன்பு யாராவது வாட்ஸப்பை நூறு கோடி பேர் பயன்படுத்தப் போகிறார்கள் என்று கணித்திருக்க முடியுமா? அதுபோல நாளை வேறொரு மென்பொருள் வரலாம். அது வாட்ஸப்பை வெற்றிக் கொள்ளவும் செய்யலாம்.
       எனினும், அது அவ்வளவு எளிதல்ல. இந்த இரு நண்பர்களை தாண்டி ஓடவிரும்புபவர்கள் இவர்களை விட இரு மடங்கு வேகமாக ஓடவேண்டும். இன்றைய தேதியில் அதற்கு வாய்ப்பில்லை.
        உழைப்பும் திட்டமிடலும் நட்பில் புரிந்துகொள்ளலும் வாழ்வில் வெற்றியை மேம்படுத்தும் என்பதில் ஆக்டன், கோம் நட்பு நமக்கு தக்க சான்றாக அமைந்திருப்பதில் வியப்பேதுமில்லை. ஆசிரியப் பெருமக்கள் இவர்களின் உழைப்பையும் நட்பையும் நம் மாணவச் செல்வங்கள் அறிந்து கொள்ள உதவுங்கள், சொல்லமுடியாது, நம் வகுப்பறையிலும் கூட ஆக்டனும் கோமும் இருப்பார்கள் தானே !!
       இனிய வணக்கங்களுடன் சி.குருநாதசுந்தரம்.
நன்றி : வாட்ஸப் இணையம், விக்கிபீடியா, நண்பர் வினோத்குமார்.

2 comments:

  1. நம் வகுப்பறையில் கூட ஆக்டனும் கோமும் இருக்கலாம்தான்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  2. அருமையான இருவர் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்..

    ReplyDelete