பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Thursday 1 May 2014

உணர்வின் முதற்புள்ளி.




     எனக்குப் பக்கத்தில்
     வந்தமர்ந்தது..
     அழகுச் சாறொன்று.

     பார்க்கலாமா வேண்டாமாவென்று..
     மனதுக்குள் பட்டிமன்றம்.

     நளினங்களின் நயங்கள்
     துரத்தும் சிலிர்ப்புகளில்
     புரியாத இன்பம்.

     உதடுக் குவிப்பிலும்
     உணர்வுக் குவிப்பிலும்
     சிறைபட்ட சுயம்.

     நீண்ட விரல்களின்
     குளிர்வாசம் வந்தடைந்த
     தென்றல் நொடிகளில்
     மறந்த நிஜம்.

     கூந்தலில் அமர்ந்த
     கர்வம்கொண்ட
     மல்லிகைப்பூவின் சிரிப்பில்
     மணத்த மனம்.

     கால்சலங்கை ஒலிகளோடு
     இதயத் துடிப்பொலிகளின்
     ஒப்பீட்டுத் தாளலயம்.

     முத்துப் பல்லொலித்த
     முக்கியச் சொற்களில்
     அகராதித் தேடல்.

     பார்த்துவிடுவதென்று ..
     முடிவுசெய்த தருணங்களில்..

     என்னங்க, உடம்பைப்
      பத்திரமா பாத்துக்கோங்க

     அன்பின் உரத்தஒலிகளில்
     நொறுங்கிப்போயின..
     அழகியல்நினைவுகளும்
     அழிக்கமறுத்த உறுத்தல்களும்.

     அதன்பின்வந்த நிமிடங்களில்..
     நகர மறுத்தது..
     உணர்வின் முதற்புள்ளி.



No comments:

Post a Comment