பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Tuesday 15 July 2014

எப்பொழுது வருவாய் கர்மவீரா !






அழுக்குச் சட்டையுடன்
ஆதரவின்றிப் படர்ந்த
என்
அறியாமைக் கைகளை
அன்புடன் பற்றி,
அழகுப் பள்ளிக்கு
அழைத்து வந்தாய் !

அகரம் படிக்கவைத்தாய்,
அறிவும் செழிக்கவைத்தாய்.

அழுத உதடுகளில்
அழகுப் புன்னகையைத்
தவழச் செய்தாய் !

பசித்த வயிற்றுக்குப்
பரிவாய் சோறிட்டாய் !

நீ
படிக்காததையெல்லாம்
என்னைப்
படிக்கச் சொன்னாய்.

தலைகவிழ்ந்திருந்த
என்
நிமிர்தலை
வீழ்த்தினாய் !

என் விரல்களில்
உண்மையை எழுதச் சொன்னாய்,
என் கரும்பலகையில்
மனிதநேயம் பதிவு செய்தாய்.

சாதனைகளை எட்டுவதற்காய்
உன்

சரித்திரத்தை எனதாக்கினாய்.

என்
சமூகம் காத்தாய் !

என்
நினைவுகளில் பூக்களைப்
பயிரிட்டாய் !

அம்மாவின் மடியில்
அழகுத் தமிழைப்
பேச வைத்தாய்.

பள்ளிச் சுவர்களிலெல்லாம்
அப்பாவின் கனவுகளை
எழுதச் செய்தாய்.
அதில்
என் இலக்குகளை
எழுத்தாக்கினாய் !

நீ
எப்போது வருவாயென
பள்ளி வாசலில்
தினமும் காத்திருக்கிறேன்.

உன்
கால்தடங்கள் மீண்டும்
என்
பள்ளித் தளங்களாக வேண்டும்.

என்
வாழ்வு மரத்தில்
நீ
இளைப்பாற
அறிவூஞ்சல்
அமைத்திருக்கிறேன் !

நீ நட்ட
விதை வளர்ந்து
விழுதுகளான கதை கேட்க
கர்மவீரா
எப்பொழுது வருவாய் ?

5 comments:

  1. வணக்கம்
    ஏழைகளின் தோழனின் பிறந்த தினத்தில் வடித்த கவிதை
    இதயத்தை நெகிழவைத்த கவிதை கண்டு மகிழ்ந்தேன்.. பகிர்வுக்குநன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. கவி கண்டு நெகிழ்ந்தேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  3. ஆதங்கத்துடன்... சிறப்பான வரிகள்...

    ReplyDelete
  4. விதை வளர்ந்து விழுதானதே போதுமன்றோ அந்தக் கர்மவீரருக்கு? எந்த உலகிலிருந்தாலும் அவர் பார்த்து வாழ்த்திக்கொண்டுதான் இருப்பார்! வாழ்க பெருந்தலைவர் புகழ்!

    ReplyDelete