பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Sunday 7 August 2016

நட்பின் கறை !






நட்பின் கறை !




ஐந்தாம் வகுப்பின்

கடைசி இருக்கையில்,

எனக்காக,

பாதி மிட்டாய் கடித்த

உன்

பற்களிலும்..



எட்டாம் வகுப்பில்

உடைந்த  மண்டையுடன்

நான்

உன் மடி சாய்ந்தபோது,

செந்நீர் பட்ட

உன்

சட்டையிலும் ..



பத்தாம் வகுப்பில்

வாங்கிக்கொடுத்த

பொன்னியின் செல்வனின்

முதல் பக்கத்தில்

நீ

சிந்திய மையிலும்..



பசியான பொழுதுகளில்

அம்மாவின் அதிரசத்தைத்

திணித்த

எண்ணெய் படிந்த

எனது

சட்டைப் பையிலும்..



பணி கிடைத்தவொரு

மகிழ்வு நொடியில்..

என்னை,

முத்தமிட்ட

உன் எச்சிலிலும்..



இருசக்கர வாகன விபத்தில்

உன்

கண்ணிரால் மூடிய

என்

கிழிந்த சதைத் தழும்புகளிலும்..


நம் நட்பின் கறை.. !!



நினைவுகள்

நரம்புகளில்  பயணிக்கும் போது..

நான்

நீயானேன்..!


என்றாவது ஒருநாள்

புறநானூற்றின்

நானூற்று ஒன்றாவது

பாடலில்

நம் கறை பேசப்படும் ..!


என்

உணர்வின் நரம்புகளுக்கு

அன்பு வாழ்த்துகள் !!



         சி.குருநாதசுந்தரம்.

6 comments:

  1. சிறப்பான வரிகள்! அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

      Delete
  2. அருமை
    நட்பு போற்றுவோம்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் நட்பு எங்கள் புதுக்கோட்டை ஆசிரியர்களுக்கு புத்துணர்வூட்டும் நட்பு ஐயா. நன்றி

      Delete
  3. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete