பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Saturday 28 June 2014

இல்லறம். - வள்ளுவரின் வாழ்வறம்.




              உலகத்திலுள்ள அத்தனை உயிர்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு உயிருக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா ? யார் அந்த பெருமைக்குரியவர் ?

                           அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

                          தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது எதற்காகவென்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம். ஆனாலும், கணவரிடம் காரணத்தை
கேட்டதில்லை.

                         இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில்
 தான் கணவரிடம் கேட்டாராம்.சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே அவை
 இரண்டும் என்றாராம். நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்று நெகிழ்ச்சியாகக் கூறினார் ஐயன்..


                 வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சோறு சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.

                            பழைய சோறு எப்படிச் சுடும்? அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படிக்  கணவருடன் வாதம் செய்யாமல்விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் வாசுகி அம்மையாருக்கு உண்டு.

                                                அந்தக் கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிற்றை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். 





                                       “நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகுஎன்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார். நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,
 

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு.


என நான்கடியில் ஒரு பாட்டெழுதினார்.

                      அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

                           இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்குக் கூட,நீதிமன்ற வாயிலில் நிற்கும் இணையர், இந்நிகழ்வை மனதிற்குள் இருத்தல் அவசியமான ஒன்றன்றோ !


உசாத்துணை நூல்கள் : 1. வள்ளுவரின் அறம் - மு.வ.
                                         2. வள்ளுவனில் அறியப்படாதவை - குலோத்துங்கன்.
                                         3. வள்ளுவனின் இல்லறம் -  இறையன்பு.
 நன்றி :  மாவட்ட நூலகம், புதுக்கோட்டை.

5 comments:

  1. வணக்கம் ஐயா
    இதே பாடலை நானும் எனது தளத்தில் சில மாதங்களுக்கு முன்பு பதிவிட்டுள்ளேன். வள்ளுவன் வாசுகி பெயர் பொருத்தம் கூட மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆனாலும் கிணற்றுக் கயிறு அப்படியே நின்றது என்பதெல்லாம் நம்ம ஆளுங்க விட்ட கதையாக தான் கண்டிப்பாக இருக்கக்கூடும். அது நன்மைக்காக என்றால் எதுவும் தவறில்லை. பாடலை மிக நேர்த்தியாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள் ஐயா. தொடரட்டும் உங்கள் தேடல். பகிர்வுக்கு நன்றிகள்...

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா
    தங்கள் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். பார்க்கவும்
    http://blogintamil.blogspot.in/2014/06/teachers-in-web-world.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்ப. மணவிழா காணும் மாண்புடை இணையருக்கு வாழ்த்துகள்.

      Delete
  3. நம்மவர்கள் நம்பும் கதையைவிட நம்ப முடியா கதை பலவற்றைக் கூறியுள்ளார்கள். நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்வோம்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. தங்களின் கருத்தை முற்றிலும் ஏற்கிறேன். நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

      Delete